பொதுமக்கள் முன்னிலையில் தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்து கொண்டதால் பரபரப்பு

நெல்லிக்குப்பம் தி.மு.க., நகர செயலாளராக மணிவண்ணன் உள்ளார். சேர்மன் ஜெயந்தி கணவர் ராதாகிருஷ்ணன் தலைமை பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். மணிவண்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன் தனித்தனி கோஷ்களாக செயல்படுகின்றனர்.

நேற்று முன்தினம் கீரை மார்க்கெட் அருகில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. அப்போது, அங்கு வந்த பொருளாளர் ஜெயசீலன், கவுன்சிலர் ஸ்ரீதர் ஆகியோர் எங்களுக்கு கூட்டத்துக்கான அழைப்பு வரவில்லை என, நகர செயலாளர் மணிவண்ணனிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, 30 வார்டுகளில் 150 நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் வந்தாலே கூட்டம் அதிகமாக இருந்திருக்கும். முறைப்படி தகவல் தெரிவிக்காததால் கூட்டம் வரவில்லை. தலைமை மூன்று இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடப்பதாக அறிவித்தது.

ஆனால் சேர்மன் வசிக்கும் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் கூட்டம் நடத்தாமல் புறக்கணிக்கிறீர்கள். தலைமை உத்தரவை மதிக்கவில்லை. ஆளுங்கட்சியான நாம் வசூல் செய்துதான் கூட்டம் நடத்த வேண்டுமா என, நகர செயலாளர் மணிவண்ணனிடம் மாவட்ட பிரதிநிதி கதிரேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வார்டு செயலாளர்களிடம் கூட்ட அழைப்பிதழ் கொடுக்கப்படுகிறது. அவர்கள் தான் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். போஸ்ட் ஆபீஸ் பகுதியில் அடுத்த முறை கூட்டம் நடத்தப்படும் என, நகர செயலாளர் மணிவண்ணன் சமாதானம் செய்தார். தொடர்ந்து, கூட்டம் நடந்தது. பொதுமக்கள் முன்னிலையில் தி.மு.க., வினர் வாக்குவாதம் செய்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

Advertisement