20 ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் தடை; முன்மாதிரியாக திகழும் பிள்ளையார்குப்பம் கிராமம்

பாகூர்; 20 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ் டிக் பொருட்களுக்கு தடை விதிப்பு, முன் மாதிரி கிராமமாக திகழ்ந்து வருகிறது பிள்ளையார்குப்பம் கிராமம்.

சுற்றுச்சூழல் மாசை தடுக்கும் வகையில், ஒரு முறை பயன்படுத்த கூடிய, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு தடை விதித்தது.

இது குறித்து புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை சார்பில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகூர் கொம்யூன் பிள்ளையார் குப்பம் கிராமத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இருந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசை தடுக்கும் வகையில், கடந்த 2005ம் ஆண்டு பிள்ளையார்குப்பம் கிராம சபை கூட்டத்தில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தடை விதித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, ஊர் எல்லை களில் விழிப்புணர்வு பலகை அமைத்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் தயாரிப்பது குறித்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வீடு தோறும் சணல் பைகள் வழங்கப்பட்டது.

மேலும், புதுச்சேரி மாசு கட்டுப்பட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷின், வழிகாட்டுதலின் படி, பிள்ளையார்குப்பம் எவர்கிரின் சுற்றுச்சூழல் நிறுவனம், கிராம மக்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களை வழங்குதல், குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்தல், மரம் நடுதல் போன்ற தொடர் விழிப்புணர்வு பணிகளின் மூலமாக, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை மற்றும் ஒழிப்பு நடவடிக்கையில், முன் மாதிரி கிராமமாக பிள்ளையார்குப்பம் திகழ்ந்து வருகிறது.

Advertisement