உழவர்கரை வருவாய் கிராமங்களில் கூடுதல் வி.ஏ.ஓ., நியமிக்க கோரிக்கை

புதுச்சேரி; உழவர்கரை தாலுகா அலுவலகத்தில் உள்ள எட்டு வருவாய் கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு கிராம வருவாய் அலுவலகத்திலும் கூடுதலாக நான்கு வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்களை நியமிக்க கோரி கவர்னர், முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் கலெக்டர் ஆகியோருக்கு சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி அனுப்பியுள்ள மனு:

உழவர்கரை தாலுகா அலுவலகம் 1969ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில், லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, ரெட்டியார்பாளையம், ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி ரெட்டியார் பாளையம், உழவர்கரை, தட்டாஞ்சாவடி, சாரம், கருவடிக்குப்பம், காலாப்பட்டு, பிள்ளை சாவடி என எட்டு வருவாய் கிராமங்கள் உருவாக்கப்பட்டது.

தற்போது அதிக அளவிலான மக்கள் தொகை, நகர்களும் உருவாகியுள்ளதால் உழவர்கரை தாலுகா அலுவலகம் லாஸ்பேட்டை, காலாப்பட்டு, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், காமரஜ் நகர் பேன்ற ஐந்து சட்டசபை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய் கிராமங்களை இதுவரை பிரிக்காமல் உள்ளதால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரி படிக்க ஜாதி, குடியிருப்பு சான்றிதழ்கள் வாங்கவும், பொது மக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை உடனடியாக வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே உழவர்கரை தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கூடுதலாக நான்கு வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement