கர்நாடகாவுக்கு ரூ.8,000 கோடி பிரஹலாத் ஜோஷி பெருமிதம்

பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கர்நாடகாவுக்கு ஆண்டுதோறும் 8,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக, மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், இந்தியா தற்போது உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. மோடி அரசின் சாதனை பூஜ்யம் என்று கூறியவர்களுக்கு, உலக வங்கி பதில் அளித்துள்ளது.

'மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் நம் நாட்டில் 5,000க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நமது நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகாவுக்கு, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டு ஏழாயிரம் முதல் எட்டாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 800 கோடி ரூபாய் வழங்கியதே உயர்ந்த தொகை. உதான் திட்டம் மூலம் 1.50 கோடி மக்கள் பயனடைந்து உள்ளனர். சாதாரண மக்களின் விமான பயண கனவு நனவாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்ட பின், வளர்ச்சி அதிகம் நடக்கிறது.

நாட்டை பாதுகாப்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார். இதற்கு ஆப்பரேஷன் சிந்துார் எடுத்துக்காட்டு. இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் 10 விமானப்படை தளங்கள் சேதம் அடைந்து உள்ளன. இன்று 70 சதவீத பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. 2026 ம் ஆண்டுக்குள் நக்சலிசத்தை முழுமையாக ஒழிப்போம்.

இவ்வாறு கூறினார்.

Advertisement