1 அடி கத்தியை விழுங்கி அவதிப்பட்ட பாம்பு

உத்தரகன்னடா : பொதுவாக நாகப்பாம்புகள், எலி, கோழி முட்டைகளை விழுங்குவது வழக்கம். ஆனால் குமட்டாவில் பாம்பொன்று, கத்தியை விழுங்கி அவதிப்பட்டது.

உத்தரகன்னடா மாவட்டம், குமட்டா தாலுகாவின், ஹெகடே கிராமத்தில் வசிப்பவர் கோவிந்த நாயக். நேற்று காலை இவரது வீட்டின் சமையல் அறையில் இருந்த 1 அடி நீளமான கத்தி, வீட்டின் வெளிப்புறம் விழுந்தது.

அதை எடுக்க முற்பட்டபோது, பாம்பு தென்பட்டதால் வீட்டினர், பயந்து வீட்டுக்குள் சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்கு பின் சென்று பார்த்தபோது, கத்தியை காணவில்லை.

பாம்பு எதையோ தின்றுவிட்டு, அசையாமல் படுத்து கிடந்தது. பாம்பு அங்கிருந்து செல்லட்டும் என, சிறிது நேரம் காத்திருந்தனர். ஆனால் அது நகரவே இல்லை.

கத்தி, அங்கு இல்லாததை கவனித் கோவிந்த நாயக், பாம்பு விழுங்கி இருக்கலாம் என, சந்தேகித்தார். பாம்பு வல்லுநர் பவன் நாயக்குக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த அவர், பாம்பை சோதித்தபோது கத்தியை விழுங்கியிருப்பது தெரிந்தது. கத்திமுனை பாம்பின் இதய பகுதியில் சிக்கியிருந்ததால், விழுங்க முடியவில்லை. உமிழவும் முடியாமல் அவதிப்பட்டது.

கத்தியை எடுக்காவிட்டால் பாம்பின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த பவன் நாயக், கால்நடை டாக்டர் அத்வைத் பட்டின் வீட்டுக்கு, பாம்பை கொண்டு சென்றார். அரைமணி நேரத்துக்கும் மேலாக போராடி, கத்தியை எடுத்து பாம்புக்கு சிகிச்சை அளித்தார். அதன்பின் வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.

Advertisement