சோனியா, ராகுல் சிறைக்கு செல்வது உறுதி

பல்லாரி : ''காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தியாவை பிச்சைக்காரர்கள் நாடு என்று கூறினர். பிரதமர் மோடியின் ஆட்சியால், உலகமே வியக்கும் வகையில் இந்தியா வளர்ந்துள்ளது,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.

பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பிரதமர் மோடியின் ஆட்சிக் காலம் துவங்கு முன்பு, இந்தியாவை பிச்சைக்காரர்கள் நாடு என்று உலகத்தினர் அழைத்து வந்தனர்.

ஆனால், கடந்த 11 ஆண்டு மோடி ஆட்சியில், உலகமே வியக்கும் வகையில் இந்தியா வளர்ந்துள்ளது.

நேரு பிரதமராக இருந்தபோது, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடாமல், அவரின் குடும்பத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்டிருந்தார். நேரு தலையிடாமல் இருந்திருந்தால், சீனாவின் ஆக்கிரமப்பு முயற்சியை, இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்திருப்பர். அவரின் முடிவால், இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திரா, அவசர நிலையை அமல்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தார்.

இவர்கள், போபால் விஷ வாயு வழக்கில் இருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை. 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் சோனியா, ராகுல் சிறைக்கு செல்வது உறுதி. இவ்வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது.

காங்கிரசின் 60 ஆண்டு கால ஆட்சியில் மோசமான நிலையில் நாடு இருந்தது. இவர்களின் ஆட்சிக் காலத்தில் அனைத்து துறையிலும் லஞ்சம் கரைபுரண்டது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளன.

உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மோடி. கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில், பொருளாதாரத்தில் பலமான நாடாக இந்தியா மாறியது. நாடு முழுதும் புதிய விமான நிலையங்கள், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்துள்ளன.

காஷ்மீரில் 370 சட்டத்தை நீக்கிய பின், ஐந்து ஆண்டுகளாக எந்த கலவரங்களும் நடக்கவில்லை. பயங்கரவாதிகளை ஒழித்து, அமைதியை ஏற்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி, முத்தலாக்கை ஒழித்து, வக்ப் சட்டத்தை அமல்படுத்தினார்.

நாட்டை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை, 11 ஆண்டுகளில் செய்துள்ளார். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கி வருகிறார். ஆனால் மாநில அரசு, 4,000 ரூபாய் கொடுப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement