எளிதாகும் ரயில் பயணம்; பயணிகள் பட்டியல் வெளியீட்டில் புதிய நடைமுறை

20

புதுடில்லி: ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது.



நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். எளிய கட்டணம், அதிக சவுகரியம் ஆகிய காரணங்களினால் நாள்தோறும் அதில் பயணிப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.


இந் நிலையில் பயணிகளின் வசதிக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முன் வந்துள்ளது.அதாவது, உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை அவர்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னரே தெரிந்து கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கைளை முன் எடுத்துள்ளது.


முதல்கட்டமாக ஜூன் 6ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கி உள்ளது. மேற்கு ரயில்வே மண்டலத்தில் பிகானோர் பகுதியில் இந்த திட்டம் ஆரம்ப கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


அதன்படி ரயில் புறப்படும் 24 மணி நேரம் முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தில் ஏதேனும் மாற்றம், மீண்டும் பயண தேதியை திட்டமிட ஏதுவாக அமைகிறது.


இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளதாவது:


பயணிகளின் ரயில் பயணத்தை எளிதாக்குவது இதன் நோக்கமாகும். இந்த திட்டம் பற்றி அவர்களின் கருத்துகள் முழுவதுமாக அறியப்பட்டு அது தொடர்பான அறிக்கை ரயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் இது குறித்து உரிய நடைமுறைகள் எடுக்கப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


தற்போதுள்ள ரயில்வே நடைமுறைகளின்படி, பயணிகளின் அட்டவணை ரயில் புறப்படும் 4 மணிநேரம் முன்பதாக தயாரிக்கப்படும். இது போன்ற புதிய செயல்திட்டம் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தை எளிதாக திட்டமிடமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement