மாநகராட்சி, குடிநீர் வாரியம் மீது காயமடைந்தவரின் தந்தை புகார்

பெங்களூரு: தரமற்ற பணிகளை நடத்தி, மக்களின் உயிரோடு விளையாடுவதாக பெங்களூரு மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மீது, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரின் பல இடங்களில் உள்ள சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் சாலைகளில் சர்க்கஸ் செய்தபடி, பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன. உயிரிழப்புகளும் நடந்துள்ளன.

ஒரு பக்கம் குடிநீர் வாரியமும், மற்றொரு பக்கம் பெங்களூரு மாநகராட்சியும் சாலைகளில் பணிகளை மேற்கொள்கின்றன. விரைந்து பணிகளை முடிப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பெங்களூரின் ராஜ்குமார் சாலையின், காபி டே முன்பாக மாநகராட்சி சார்பில் பணிகள் நடக்கின்றன. கட்டுமான பொருட்களை சாலை நடுவில் போட்டு வைப்பதால், வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.

இம்மாதம் 9ம் தேதி அதிகாலை 1:30 மணி அளவில், மஞ்சுநாத் என்ற இளைஞர் இதே சாலையில் பைக்கில் சென்றபோது, விபத்தில் சிக்கினார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.

மகனின் நிலையை கண்டு, தந்தை மனம் வருத்தம் அடைந்துள்ளார். மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், தன் மகன் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பணிகளின் பெயரில் மாநகராட்சி, குடிநீர் வாரியம் மக்களின் உயிரோடு விளையாடுகின்றன. இவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, ராஜாஜி நகரின் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், மஞ்சுநாத்தின் தந்தை நேற்று புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.

Advertisement