வணிகர் நல நிதியுதவி ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

சென்னை: வணிகர் நல வாரியத்தில், வணிகர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள், மளிகை, ஜவுளி, காய்கறி, பழ வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக, தமிழக அரசின் வணிகர் நல வாரியம் செயல்படுகிறது; இது, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

அதன்படி, நலிவடைந்த வணிகர் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதி உதவியாக, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்குமாறு வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், மே, 5ல் வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'வணிகர் நல நிதியுதவி 3 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, தெரிவித்தார். இதை செயல்படுத்தி தற்போது, அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement