டெலிகிராம் கணக்கை கைப்பற்றும் மோசடிப்பேர்வழிகள்: இந்தியாவில் பலர் பாதிப்பு

புதுடில்லி: டெலிகிராம் செயலியை மர்ம நபர்கள் ஹேக் செய்து மோசடி செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது. 'சந்தேகத்துக்கு இடமான எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்' என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் அதே அளவுக்கு சைபர் குற்றங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. தினமும் பல இடங்களில் சைபர் குற்றங்கள் நடந்த செய்திகள் வெளியாகி கொண்டுள்ளன. இதில் சிக்கி பணக்காரர்கள் முதல் ஏழைகள் என அனைத்து தரப்பினரும் பணத்தை இழந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பலர் போலீசில் புகார் அளிக்கின்றனர். சிலர் புகார் அளிக்க தயக்கம் காட்டுகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி சில குற்றவாளிகளை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இருப்பினும் மோசடி என்பது அதனை காட்டிலும் அதிகமாக உள்ளது.
அந்த வகையில், டெலிகிராம் செயலியை முடக்கி மர்ம நபர்கள் மோசடி செய்து வருகின்றனர். 'வாட்ஸாப்' செயலியை போல, 'டெலிகிராம்' செயலியும் தகவல் பரிமாற்றத்துக்கு உலக முழுதும் பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸாப் போல பல கட்டுப்பாடுகளை இந்த செயலி பின்பற்றாததால், உலகம் முழுதும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த செயலியை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் ஏராளமானோர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள மர்ம நபர்கள் சிலர், இந்தியாவில் பலரின் கணக்குகளை ஹேக் செய்து மோசடி செய்து வருகின்றனர். டெலிகிராம் பயனாளர்களின் ஆர்வத்தை துாண்டும் வகையில் குறுஞ்செய்தியும், ஒரு லிங்க்கும் அனுப்புகின்றனர்.
அதற்கு பதிலளிப்பவர்களுக்கு 'உங்களின் புகைப்படங்கள் ஆன்லைனில் உள்ளது. அதனை பெற கிளிக் செய்யவும்,' எனக் கூறி லிங்க் அனுப்புகின்றனர். அதனை 'கிளிக்' செய்ததும், டெலிகிராம் செயலிக்கு வரும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை கேட்கின்றனர்.
அதை பதிவு செய்துவிட்டால், உடனடியாக, குறிப்பிட்ட அந்த டெலிகிராம் கணக்கு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடுகிறது. பிறகு அவர்கள், அதை பயன்படுத்தி பல வகைகளில் மோசடி செய்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் இத்தகைய மோசடி நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சமூக வலைதளங்களில் வரும் சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
