இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: ஜார்ஜியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்; மீட்க அரசு நடவடிக்கை

ஜெய்ப்பூர்: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட விமான போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, ராஜஸ்தானைச் சேர்ந்த 61 பேர் ஜார்ஜியாவில் சிக்கி தவிக்கும் நிலையில் அவர்கள், நாடு திரும்ப மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள இந்திய துாதரகம் அவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஜூன் 8 ம் தேதி, ராஜஸ்தானை சேர்ந்த பட்டயக்கணக்காளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்பட 61 பேர் ஜார்ஜியாவுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் ஜார்ஜியாவிலிருந்து நேற்று(ஜூன்-13) நாடு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழித்தாக்குதலால் விமான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில் நாடு திரும்ப வழியின்றி தவித்த அவர்கள், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் நாடு திரும்ப உதவியை கோரினர்.
இது தொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள இந்திய துாதரகம் கூறியதாவது:
சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி எண்கள் தெரிவித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் மாற்று விமானங்கள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இந்திய துாதரகம் கூறியுள்ளது.
துாதரக உதவியுடன் விரைவில் அவர்கள் இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.