தி.மு.க., பெயர் வைத்து ஏமாற்றுவது இனிமேல் நடக்காது: சொல்கிறார் அண்ணாமலை

சென்னை:மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் , பிரதமர் மீன்வளத் திட்டம் , உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்! என்று முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுருந்தார். மேலும் படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்று காமடியை நினைவுபடுத்தியிருந்தார்.

இதை தொடர்ந்து அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி தரும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை:

இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ரூ.5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.

உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement