புதிதாக சாலை அமைத்து மீண்டும் தோண்ட தாம்பரம் மாநகராட்சியில் 'நவீன திட்டம்'

குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டை, பாரதிபுரம், 25வது வார்டில் வசிப்போருக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முழுமையாக முடியாமல் சாலை படுமோசமான நிலையில் இருக்கும் நிலையில், புதிதாக தார் சாலைகள் போடுவதற்கு, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பாரதிபுரம் பகுதியினர் கூறியதாவது:

குடிநீர் குழாய் பதிக்கும் பணி, நேரு தெருவில் தேவி திருமண மண்டபம் முதல் விநாயகர் கோவில் வரை முடிந்துள்ளது. அடுத்ததாக, விநாயகர் கோவில் முதல் புருஷோத்தம்மன் நகர் முடிவு வரை, குழாய் பதிக்க வேண்டும்.

அந்த பணியை முடிக்காமல், விநாயகர் கோவில் முதல் புருஷோத்தம்மன் நகர் முடிவு வரை, அவசர அவசரமாக தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, பழைய சாலையை சுரண்டி வருகின்றனர்.

புதிதாக சாலை அமைத்தாலும், அதை பெயர்த்து எடுத்து மீண்டும் குழாய் பதிக்க வேண்டும். அப்படியிருக்கையில், சாலை அமைக்க ஏன் அவசரம் காட்டுகின்றனர் என தெரியவில்லை. இதேபோல், ஸ்கூல் தெரு, வசந்த மண்டபம் தெருவில் குழாய் பதிக்காத நிலையில், தார் சாலை போடப்பட்டுள்ளது.

குழாய் பதிப்பு பணி முடியாத சாலைகளில், புதிதாக சாலை அமைத்து, மீண்டும் பள்ளம் தோண்டி நாசப்படுத்துவதால் அரசு பணம் தான் வீணாகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் இதுபோல் ஊழல் நடப்பதற்கு, இந்த ஒரு விஷயமே சாட்சி. மாநகராட்சி கமிஷனர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement