விவசாயிகள் கரும்புகளை ஆலைக்கு பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தல்


தர்மபுரி, நடப்பாண்டில் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கவுள்ளதால், விவசாயிகள் தங்களது கரும்புகளை ஆலைக்கு பதிவு செய்து கொள்ள, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடவு பருவத்திற்கு பதிவு செய்யாத கரும்புகளை, ஆலை அரவைக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு பதிவு செய்துள்ள கரும்பிற்கு, மத்திய அரசின் ஆதாரவிலை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து கரும்பு மெ.டன் ஒன்றிற்கு, 4,000 ரூபாய்- வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் கரும்பு விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம், பருசீவல் நாற்று நடவு செய்யும் விவசாய அங்கத்தினர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 6,250 ரூபாய், ஒரு பரு கரணை நடவு செய்யும் விவசாய அங்கத்தினர்களுக்கு ஏக்கருக்கு, 2,000 ரூபாய், திசு வளர்ப்பு நாற்று நடவிற்கு ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய், வல்லுனர் விதை கரும்பு நடவிற்கு ஏக்கருக்கு, 6,250 ரூபாய்- மற்றும் நாலரை அடி அகலபார் நடவிற்கு ஏக்கருக்கு, 1,200 ரூபாய் என, 5 வகையான மானியங்கள் வழங்கப்பட உள்ளது.
எனவே புதிய கரும்பு நடவு, மறுதாம்பு கரும்பு மற்றும் இதுவரை கரும்பு நடவு செய்து, ஆலைக்கு பதிவு செய்யாத அங்கத்தினர்கள் அனைவரும், விரைவில் தங்கள் பகுதி கரும்பு அலுவலர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement