கணவரால் வெட்டப்பட்ட பெண் மரணம் கொலை வழக்காக மாற்றம்

1

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே நடத்தை சந்தேகத்தில் கணவரால் வெட்டப்பட்ட பெண் இறந்தார். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.

திருநெல்வேலி பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர் 35. மனைவி இசக்கியம்மாள் 27. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன், 4 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

பாஸ்கர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

பாஸ்கர் குற்றவாளிக்குகளில் சிக்கி சிறை செல்வதும் ஜாமினில் வந்ததும் மீண்டும் அவரை போலீசார் கைது செய்வதுமாக தொடர்ந்ததால் அவர் வீட்டுக்கு வருவதே இல்லை.

இதனால் இசக்கியம்மாளுக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இசக்கியம்மாள் சில தினங்களுக்கு முன் அந்த நபருடன் திருச்செந்துார் கோயிலுக்கு சென்றுள்ளார். அதை அவர் வீடியோவாக உறவினர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவை பாஸ்கர் பார்த்ததால் மனைவி மீது ஆத்திரமுற்றார்.

கடந்த 10ம் தேதி ஜாமினில் வந்த பாஸ்கர், பேட்டை வீட்டிற்கு சென்றார். மனைவி இசக்கியம்மாளிடம் திருச்செந்துார் சென்றது குறித்து கேட்டார். தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர், அரிவாளால் இசக்கியமாளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

காயமடைந்த இசக்கியம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாஸ்கர் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே இசக்கியம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.

Advertisement