பனப்பாக்கத்தில் கீரை, காய்கறி வளர்க்க செலவிட்ட நிதி ரூ.3.37 லட்சம் வீண்

பொன்னேரி:அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டத்திற்காக, காய்கறி மற்றும் கீரை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் முடங்கி கிடப்பதுடன், அதற்காக செலவிட்ட 3.37 லட்சம் ரூபாய் வீணாகி வருகிறது.

மீஞ்சூர் ஒன்றியம் பனப்பாக்கம் ஊராட்சியில், 2022ல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 50 சென்ட் பரப்பில் காய்கறி, கீரைகள் மற்றும் முருங்கை செடிகள் உள்ளிட்டவை வளர்க்க, 3.37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதில் கிடைக்கும் காய்கறி மற்றும் கீரைகைளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டது.

இதற்காக, அங்கு சிமென்ட் துாண்கள் அமைத்து, சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. ஆனால், திட்டத்திற்கு செலவிட்டதுடன், அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

காய்கறி, கீரைகள் மற்றும் முருங்கை செடிகள் ஏதும் வளர்க்கப்படவில்லை. கண்துடைப்பிற்காக வேலி மட்டும் அமைக்கப்பட்டு திட்டம் முடங்கி கிடக்கிறது.

திட்டம் செயல்பாடு இல்லாத நிலையில், அங்கிருந்த இரும்பு வேலிகளும் மாயமாகி வருகின்றன. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், இத்திட்டத்திற்கு செலவிட்ட 3.37 லட்சம் ரூபாய் வீணாகி உள்ளது.

இனிவரும் காலங்களில், அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்த, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement