உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்போம்; ஏர் இந்தியா

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை நிற்போம் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி மதியம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய 30 விநாடிகளிலேயே, அங்குள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்தது. இதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 274 பேர் உயிரிழந்தனர்.
மீட்கப்பட்ட சடலங்கள், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் டி.என்.ஏ., பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவரவர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உடல்களை பெறுவதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆமதாபாத்தில் திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்பதாக ஏர் இந்தியா விமான நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை; விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு துணை நிற்கிறோம். அவர்களை தொடர்பு கொண்டு பேசியதுடன், அடுத்த கட்ட உதவிகளை செய்து வருகிறோம்.
400க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஆமதாபாத்திற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை எங்களின் குழுக்கள் மூலம் ஏர் இந்தியா மற்றும் டாடா குழுமமும் இணைந்து செய்து வருகிறது.
இறந்தவர்களின் உடல்களையும் அவர்களின் தனிப்பட்ட பொருட்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஏர் இந்தியா அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. குஜராத்தில் அவர்கள் திரும்பு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான உதவிகளையும் செய்து வருகிறோம்.
இந்த துயரமான வேளையில் அனைத்து விதங்களிலும் உதவிய மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுக்கு நன்றி. அதேபோல, மருத்துவமனை ஊழியர்கள், மாணவர்களின் சேவைகள் மற்றும் உதவிக்கு நன்றி.
இந்த விமான விபத்து குறித்த விசாரணைக்கு ஏர் இந்தியா நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கும். ஆமதாபாத் மற்றும் மும்பை விமான நிலையங்களில் செயல்பட்டு வரும் உதவி மையங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், உதவிக்கு, 1800 5691 444 (இந்தியா), +91 80627 79200 (வெளிநாடு), என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்
-
மருத்துவமனையில் சோனியா அனுமதி
-
'ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது'
-
இரும்பு பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி; 20 பேர் மாயம்
-
கைதான ஏழு ஆண்டுக்கு பின் துருக்கி செய்தியாளருக்கு 'துாக்கு'
-
டூவீலரில் கடத்தப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல்; தப்பிய இருவருக்கு சுங்கத்துறையினர் வலை
-
வீடு கட்டி தருவதாக 70,000 பேரை ஏமாற்றி ரூ.2,700 கோடி சுருட்டல்