அன்புமணி ஆதரவாளர் வீட்டின் மீது ராமதாஸ் அணி நிர்வாகி குண்டு வீச்சு?

அரியலுார்: அரியலுார் அருகே பா.ம.க., நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், அன்புமணி ஆதரவாளரான அந்த நிர்வாகி, தன் வீட்டின் மீது குண்டு வீசியது, ராமதாஸ் அணி மாவட்ட செயலர் காடுவெட்டி ரவி தான் என, புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலுார் மாவட்டம், கோவில்வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 40; பா.ம.க.,வில் பசுமை தாயகம் அமைப்பின் ஆண்டிமடம் ஒன்றிய தலைவராக உள்ளார். அன்புமணி ஆதரவாளர். இவர் வீடு மீது நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

அதிர்ஷ்டவசமாக மணிகண்டன், அவரது குடும்பத்தினர் தப்பிய நிலையில், டூ வீலர் சேதமடைந்தது. மணிகண்டன் ஜெயங்கொண்டம் போலீசில், ராமதாஸால் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட காடுவெட்டி ரவி மீது புகார் அளித்தார்.

இந்நிலையில், அன்புமணி ஆதரவாளரான வக்கீல் பாலு, நேற்று ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., ரவிசக்கரவர்த்தியை நேரில் சந்தித்து, மணிகண்டனுக்கு ஆதரவாக புகார் செய்தார்.

அவர் கூறியதாவது:

பெட்ரோல் குண்டு வீசியது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியாக மாறி, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் சம்பவமாக மாறிவிடக்கூடாது. இதில், மாவட்ட காவல்துறை, தனி குழுவை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement