ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்

7

புதுடில்லி: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே, கடந்த சில நாட்களாக மோதல் நடக்கிறது. இரு தரப்பும் ஏவுகணைகளை வீசி வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

ஈரானில் உள்ள பல்கலைகளில், நம் நாட்டை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இஸ்ரேல் - ஈரான் மோதலால், இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்கள், நம் துாதரகத்தின் உதவியால் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதில், 110 பேர் அர்மேனியா நாட்டின் எல்லை வழியாக வெளியேறியதாகவும், அவர்களுடன் துாதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உடனடியாக அந்நகரத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் - ஈரான் மோதலை கருதி, டெஹ்ரானில் உள்ள நம் துாதரகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement