துணி 'லோடு' ஏற்றிச்சென்ற லாரி சாய்ந்து பைக்கில் சென்ற மொபைல் ஊழியர் பலி

ஓமலுார்,
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே சிந்தாமணியூரை சேர்ந்தவர் தமிழ்மணி, 26. சேலம், 4 ரோட்டில், தனியார் மொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று காலை, 7:30 மணிக்கு, அவரது சகோதரரை, ஓமலுாரில் இறக்கிவிட்டு, முத்துநாயக்கன்பட்டி வழியே சேலத்துக்கு, 'ஹீரோ ேஹாண்டா' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் புறப்பட்டார்.

அதேநேரம் குஜராத்தில் பேல் துணி 'லோடு' ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி, தொட்டியத்தை சேர்ந்த டிரைவர் நாகராஜ் ஓட்டினார். இந்த லாரி, ஓமலுார் தாலுகா அலுவலகம் எதிரே ரயில்வே மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது, அதிக பாரத்தால் கட்டுப்பாட்டை


இழந்து, இடதுபுறம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்றுகொண்டிருந்த தமிழ்மணி மீது துணி கட்டுகள் விழுந்ததில், அவர் அந்த கட்டுகள், பால தடுப்புச்சுவர் நடுவே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவருக்கு முன்புறம், மற்றொரு பைக்கில் சென்றுகொண்டிருந்த, ஓமலுார், ஒட்ட தெருவை சேர்ந்த பழனிசாமி, 61, காயம் அடைந்தார். லாரி டிரைவர் நாகராஜூம் காயம் அடைந்தார். இந்த இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
லாரியில் இருந்து பாலத்தில் டீசல் வழிந்தோடியது. ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், டீசல் மீது தண்ணீர் பாய்ச்சி அசம்பாவிதத்தை தவிர்த்தனர். கிரேன் மூலம் லாரியை அகற்றும் பணி நடந்தது. ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

Advertisement