கபினியில் திறக்கப்பட்ட நீர் தமிழகத்தை வந்தடைந்தது


ஒகேனக்கல் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், ஒகேனக்கல் காவிரியாற்றை வந்தடைந்தது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து கடந்த, 17ல், வினாடிக்கு, 10,000 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. 18ம் தேதி பிற்பகலில் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அங்குள்ள மத்திய நீர் ஆணைய கணக்கீட்டின்படி, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 6,500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 6:00 மணிக்கு, 9,500 கன அடியாக அதிகரித்தது. 11 மணிக்கு வினாடிக்கு, 16,000 கன அடியாக அதிகரித்ததையடுத்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் காவிரியாற்றில் குளிக்க தடை விதித்தார்.
தொடர்ந்து, ஒகேனக்கல் மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைபாதைக்கு பூட்டு போட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 18,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Advertisement