தமிழர் வரலாற்றை அ.தி.மு.க., மறைக்க பார்க்கிறது: எழிலன்

சென்னை:''பா.ஜ.,வுடன் சேர்ந்து, தமிழர் வரலாற்றை மறைக்க அ.தி.மு.க., முயற்சிக்கிறது,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலன் குற்றம் சாட்டினார்.

அவரது பேட்டி:

பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தொல்லியல், அருங்காட்சியகங்கள் துறைக்கு, ஆண்டுக்கு, 105 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருக்கிறார்.

ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், 2016 முதல் 2021 வரை, திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதுார், கீழடி அகழ்வாய்வுக்கு, ஒரு கோடி ரூபாய் தான் நிதி ஒதுக்கப்பட்டது; 105 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக, பொய் சொல்லி இருக்கிறார்.

தி.மு.க., ஆட்சியில், 2021ல், கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லுார், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொற்கை, கொடுமணல், 2022ல், கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாளையம், 2023ல், கீழடி, கங்கைகொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பொற்பனைக்கோட்டை, பட்டறைபெரும்புதுார், 2024ல், மருங்கூர், கொங்கல் நகரம் ஆகிய இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த ஆண்டு, கீழடி, வெள்ளலுார், ஆதிச்சநல்லுாரில் அகழ்வாய்வு மேற்கொள்ள, 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.

'கீழடியில் இனி ஆய்வு நடத்தத் தேவையில்லை' என, மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது. அதை அப்போதிருந்த அ.தி.மு.க., அரசு எதிர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் கனிமொழி என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படியே, அ.தி.மு.க., ஆட்சியில், கீழடியில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது.

கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று பாண்டியராஜன் கூறுகிறார். பா.ஜ.,வினரும், அ.தி.மு.க.,வினரும் சேர்ந்து, தமிழர்களின் வரலாற்றை மறைக்க பார்க்கின்றனர்.

தி.மு.க., பிரிவினைவாத அரசியல் செய்யவில்லை. அறிவியல் உண்மைகளையே பேசுகிறோம். கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை ஏற்கும் வரை போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement