ஒருபுறம் சுவாமி தரிசனம்; மறுபுறம் எதிர்ப்பு திருநீறு அழித்து திருமாவளவன் நாடகம்; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

19

மதுரை: திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'செல்பி' எடுப்பதற்காக நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்ததற்கு ஹிந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


மதுரையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறியதாவது: நெற்றியில் வைத்த திருநீற்றை கோயில் வளாகத்தில் வேண்டுமென்றே அழித்தது முருக கடவுளை இழிவுபடுத்துவதாக உள்ளது.


'திருநீற்றை ஏன் அழித்தீர்கள்' என்று திருமாவளவனிடம் கேட்டால், '6 மணி நேரமாக நெற்றியில் இருந்தது. அதனால் அழித்தேன்' என்று தவறான விளக்கம் அளித்துள்ளார். கோயிலுக்குள் 6 மணி நேரமாகவா இருந்தார். பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா.


திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது முருகனை தரிசிப்பது போல் தரிசித்து விட்டு திருநீற்றை அழித்துள்ளார். பிறகு சிக்கந்தர் பள்ளிவாசல் தர்ஹாவிற்கு சென்று விட்டு மலை விவகாரத்தை பற்றி பேச என்ன காரணம்.
'சனாதனத்தை ஒழிப்போம், மதச்சார்பின்மையை காப்போம், கோயில் கோபுரத்தில் இருப்பதெல்லாம் ஆபாச பொம்மைகள். நாங்கள் கடவுள் மறுப்பாளர் ஈ.வெ.ரா., வாரிசு' என்று மார்தட்டி கொண்டு ஹிந்து மத நம்பிக்கைக்கும், சனாதன தர்மத்திற்கும் எதிராகவும் பேசிவரும் திருமாவளவனுக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் என்ன வேலை.

ஒருபக்கம் முருகன் கோயிலில் சுவாமி கும்பிடுவது, மறுபக்கம் முருகபக்தர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவது. யாரை ஏமாற்ற நாடகம் போடுகிறார். அதேபோல் சினிமா இயக்குனர் அமீருக்கு முருகபக்தர்கள் மாநாட்டை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement