கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு

4


திண்டுக்கல்: மதுரை முருகன் மாநாடு குறித்து திண்டுக்கல் அருகே அவதுாறாக கம்யூ., கட்சியினர் பேசியதை தட்டிகேட்ட ஹிந்து முன்னணி கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் கம்யூ., ஹிந்து அமைப்பினர் இடையே தொடர்ந்த மோதலில் பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகனின் மண்டை உடைந்தது.


திண்டுக்கல் அருகே தாடிகொம்பில் மார்க்சிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது. மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சரத்குமார் மதுரையில் நடக்கும் முருகன் மாநாடு, ஹிந்து அமைப்பினர் குறித்து அவதுாறாகவும், ஒருமையிலும் பேசினார். இதை அப்பகுதி ஹிந்து முன்னணி நிர்வாகி வினோத்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் தட்டிக்கேட்டனர்.


இதில் மார்க்சிஸ்ட், ஹிந்து முன்னணியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட அடிதடியானது. இதில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வினோத்ராஜ் 30, சக்திவேல் 30, மார்க்சிஸ்ட் நிர்வாகி சரத்குமார் 35, சண்முகவேல் 45, காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதற்கிடையே போலீசார் ஹிந்து முன்னணிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இரு தரப்பிலும் தாடிக்கொம்பு போலீசாரிடம் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.


மருத்துவமனையிலும் தொடர்ந்த அடிதடி




காயமடைந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகளை காண பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் திரண்டனர். அதுபோல மார்க்சிஸ்ட் கட்சியினரும் அங்கு திரண்டனர். இருதரப்பினரும் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். மார்க்சிஸ்ட் கட்சியினரை அப்புறப்படுத்தியபோது மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.


பதிலுக்கு பா.ஜ., வினரும் கோஷங்கள் எழுப்ப மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்கும் போலீசாருடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது பா.ஜ., மாவட்ட துணை தலைவர் பாலமுருகனை கம்யூ., கட்சியினர் கட்டையால் தாக்கினர். இதில் அவரின் மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கலவரத்தை கட்டுப்படுத்த கம்யூ., கட்சியினரை போலீசார் அங்கிருந்து வேனில் அழைத்து சென்றனர்.


இதனால் ஆத்திரமுற்ற பா.ஜ.,வினர், ஹிந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கம்யூ., நிர்வாகிகள் சென்ற காரை ஹிந்து அமைப்பினர் தாக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பா.ஜ., ஹிந்து அமைப்பினர் கலைந்து சென்றனர். எஸ்.பி., பிரதீப் கூறுகையில், ''இரு தரப்பிலும் பாரபட்சமின்றி வழக்கு, கைது நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.



விவேகம் இல்லையே



மோதலை தொடர்ந்து இரு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 50 க்கு மேற்பட்ட போலீசார் குவிந்திருந்தனர். முதலில் போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது பா.ஜ.,வினர், ஹிந்து அமைப்பினர் கலைய தயாராகினர். அதேநேரம் கம்யூ., வை சேர்ந்த பெண் நிர்வாகிகள் போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி ரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி மோதலுக்கு வழிவகுத்தனர்.


ஆண் போலீசார் மட்டும் அங்கு இருந்ததால் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. பெண் போலீசாரை வரவழைத்து உடனடியாக கைது செய்திருந்தால் மருத்துவமனையில் மோதல் ஏற்பட்டிருக்காது. கலவரத்தை அடக்க செல்லும் போலீசார் விவேகத்தோடு பெண் போலீசாரையும் அழைத்து சென்றிருந்தால் மண்டை உடைப்பு மோதலை தடுத்திருக்க முடியும்.


ஹிந்து முன்னணி கண்டனம்



ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில் குமார் அறிக்கை : முருகன் மாநாட்டை இழிவாக பேசிய நக்சல் பயங்கரவாதிகளை அரசு இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். ஹிந்து அமைப்பினர் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தி உள்ளர் . ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் பிரசாரத்திற்கு அரசு அனுமதி அளித்ததே இதற்கு காரணம். இதுபோன்ற விஷயங்களுக்கு அனுமதியளிக்க கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement