திருக்கச்சூரில் குரங்கு தொல்லை குடியிருப்புவாசிகள் தவிப்பு

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி 19வது வார்டு திருக்கச்சூர், அண்ணா நகர், பெரியார் நகர் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு கடந்த சில மாதங்களாக, குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து குரங்குகள், தின்பண்டங்களை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றன. குறிப்பாக, நான்கு மாடவீதிகள், மலை மேட்டு தெரு, அண்ணா நகர், ஈஸ்வரன் நகர் பகுதியில், 20க்கும் மேற்பட்ட குரங்குகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன.

தெருக்களில் விளையாடும் குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை அச்சுறுத்தி வருகின்றன.

வீட்டு தோட்டத்தில் உள்ள மாமரம், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டு உபயோகத்திற்காக பிடித்து வைத்துள்ள தண்ணீரையும் அசுத்தப்படுத்தி வீணாக்குகின்றன.

இந்த பகுதிகளில் உள்ள சிமென்ட ஓடுகள் பொருத்தப்பட்டுள்ள வீடுகள் மீது தாவி குதித்து ஓடுவதால், கூரைகள் சேதம் அடைகின்றன.

அண்ணா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்வதால், குழந்தைகள் அச்சமடைகின்றனர்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறுகையில்,'குரங்குகளை பிடிக்க வேண்டும் என செங்கல்பட்டு சரக வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு, குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement