விவசாய நிலங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களால் விவசாயிகள் அச்சம்

பொன்னேரி,:விவசாய நிலங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சீரமைப்பதில், மின்வாரியம் அலட்சியம் காட்டி வருவதால், விவசாயிகள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில், விவசாய நிலங்கள் வழியாக, மின்மாற்றிக்கு உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன.

தற்போது விவசாய நிலங்களில், சம்பா பருவத்திற்கு உழவுப்பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள், எப்போது வேண்டுமானாலும் கீழே விழம் நிலையில் இருப்பதால், விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பலத்த காற்று வீசும்போது சாய்ந்த மின்கம்பங்கள் கீழே விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்கம்பிகள் அறுந்து, விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. கடந்தாண்டு, கோளூர் அருகே, மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 10 மாடுகள் உயிரிழந்தன.

அதுபோன்ற துயர சம்பவங்கள் ஏதும் நடைபெறக்கூடாது என்பதற்காக, சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்ய தொடர்ந்து மின்வாரியத்திடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement