உயிர்பலி வாங்க காத்திருக்கும் அண்ணாமலைச்சேரி சாலை

பொன்னேரி:புதுச்சேரிமேடு - அண்ணாமலைச்சேரி சாலையில், ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், முட்செடிகள் வளர்ந்தும் இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பொன்னேரி அடுத்த புதுச்சேரிமேடு கிராமத்தில் இருந்து அண்ணாமலைச்சேரிக்கு செல்லும் சாலை, போக்குரவத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

சாலை முழுதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. இங்கு வளர்ந்துள்ள முட்செடிகளின் கிளைகள் சாலை வரை பரவியுள்ளன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.

பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக் கற்களில் பயணிக்கும்போது, வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர். பல்வேறு கிராம சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், பல ஆண்டுகளாக இச்சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், கிராமவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, முட்செடிகளை அகற்றி, ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement