வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய 2 கொள்ளையர்கள் கைது

வேடசந்தூர்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜிநகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சத்தை திருடிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர் நேருஜிநகரில் ராஜஸ்தான் மாநில தொழிலதிபர் முகேஷ் 37, மனைவி கவிதா 34, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார்.

வடமதுரை ரோட்டில் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல், கண்ணாடிகள் விற்கும் கடை நடத்துகிறார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன், மனைவி கடைக்கு செல்வர்.

இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் மே 11ல் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகைகள், ரூ.ஒரு லட்சத்தை திருடி சென்றனர்.

வீடு, தெரு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவிக்கள் இல்லாத நிலையில் குற்றவாளிகளை கைது செய்வது போலீசாருக்கு சவாலாக இருந்தது.

அன்றைய நாளில் நகர் பகுதி போலீஸ் கன்ட்ரோலில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் திருச்சி, கரூர் நகர்களில் உள்ள சிசி டிவி பதிவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கோகுல் 28, திருச்சி பெட்டவாய்த்தலை காந்திபுரம் முகமது ரியாஸ் 28, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் கோகுல் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து, அடிதடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 18 வழக்குகள் உள்ளன.

திருச்சி சிறையில் இருந்தபோது முகமது ரியாஸ் உடன் நட்பு ஏற்பட்டு ஜாமினில் வெளியே வந்து திருட்டு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இருவரிடமிருந்து இன்ஸ்பெக்டர் வேலாயுதம், எஸ்.ஐ., அருண் நாராயணன் மற்றும் போலீசார் நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement