இலங்கைக்கு படகில் கடத்த பதுக்கப்பட்ட 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ராமநாதபுரத்தில் ஒருவர் கைது

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம்,தொண்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 130கிலோ கடல் அட்டைகளை சுங்கத்துறையினர், வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து கடல் அட்டைகள் இலங்கைக்கு படகில் கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இங்கு சோதனையிட்ட போது நான்கு பிளாஸ்டிக் சாக்குகளில் பதப்படுத்தப்படாத 90 கிலோகடல் அட்டைகள் இருந்தது.
இதனை பறிமுதல் செய்து மருத்துவப்பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். பின்னர் அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொண்டியிலும் பறிமுதல்
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் வன உயிரின பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு கட்டுப்பாட்டு பிரிவினர் நேற்று முன்தினம்தொண்டி அருகே காரங்காட்டில் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் வலை பின்னும் இடத்தில் இலங்கைக்கு கடத்த இரு கேன்களில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக காரங்காட்டை சேர்ந்த லாரன்ஸ் 63, கைது செய்யப்பட்டார். 40 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். அவற்றை ராமநாதபுரம் வனச்சரகர் திவாகர், பாரஸ்டர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
இக்கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர். இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.