மேகமலை புலிகள் காப்பக பகுதியில் உச்ச நீதிமன்ற உயர் மட்ட குழு ஆய்வு
கம்பம்,:மேகமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் நேற்று பிற்பகல் தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் உச்ச நீதிமன்ற உயர்மட்டக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்தியா முழுவதும் புலிகள் காப்பகங்களை மேம்படுத்துவது, புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வனங்களை மேம்படுத்துவது, வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த தீர்வுகள் என்ன என்பதை நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உயர் மட்ட கமிட்டி ஒன்றை நியமித்து, உத்தரவிட்டது. இதற்கு என தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை, வனத்துறை, சுற்றுப்புறச் சூழல் துறை, மனித வள மேம்பாட்டு துறை உள்ளிட்ட துறைகளில் இருந்து 6 பேர்களை நியமித்தது. இக்குழுவினர் தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள மாஞ்சோலை, உள்ளிட்ட சில புலிகள் காப்பக வனப்பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தனர். பின் நேற்று மதியம் மேகமலைக்கு வந்தனர். இதில் மத்திய வளர்ச்சி கமிட்டியின் தலைவர் சித்தாந்ததாஸ் தலைமை வகித்தார். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாசரெட்டி முன்னிலையில், குழு உறுப்பினர்கள் சந்திரபிரகாஷ்கோயல், டாக்டர் ஜெ.ஆர்.பாட், குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். இவர்களுடன் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், எஸ்.பி. சிவபிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மேகமலையின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். பின் அங்குள்ள பயணியர் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆய்வை முடித்த குழுவினர் கேரளாவிற்கு ரோடு வழியாக சென்றனர். நேற்று இரவு தேக்கடியில் தங்கி, இன்று கேரளாவில் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர். தேனியில் நடந்த இந்த ஆய்விலும், ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்க பத்திரிகையாளர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.