இடைநிற்றலை தடுக்கும் தொழிற்கல்வி; மூடுவிழா நடத்த அரசு திட்டமா?

கோவை: தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவில் நீண்ட காலமாக ஆசிரியர்கள் நியமிக்காததால், பெரும்பாலான பள்ளிகளில் இப்பாடப்பிரிவுகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் மேல்நிலை வகுப்பில், பொறியியல், மருத்துவம், விவசாயம், கைவினைத் தொழில்கள் உள்ளிட்ட பல துறையின் உட்பிரிவான செவிலியர் பயிற்சி, பயிர் பாதுகாப்பு, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், தையல் உள்ளிட்ட, 15 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.
தற்போது, 700க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மட்டுமே இப்பாடப்பிரிவுகள் உள்ளன.
இதிலும், சில பள்ளிகளில் பி.டி.ஏ., வாயிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் மூலமாகவே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது; அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவை தொடர்ந்து, செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்கியபோது, 4,000க்கும் மேற்பட்ட பகுதி நேர, முழுநேர, ஒரு பகுதி நேரம், இரு பகுதி நேரம் ஆகிய நான்கு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
1978ல் 4,324 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2007ல் 250 பேருக்கு பணி நிரந்தரம் அளிக்கப்பட்டது. அதன்பின், இதுவரை புதிய நியமனம் நடைபெறவில்லை. இந்நிலை தொடர்ந்தால், 2030க்குள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவே இல்லாத நிலை உருவாகும்.
கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களே, தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்கிறார்கள். இது, இடைநிற்றலைத் தவிர்க்கவும், சுயதொழில் துவங்கவும் வழிவகுக்கிறது. இருப்பினும், தொழிற்கல்வி விஷயத்தில் தமிழக அரசு பாராமுகம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை' என்றனர்.

