கோவில் விக்ரகங்களை மாற்றுவதில் பழைய முறை தொடர வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள கோவில்களில், கும்பாபிேஷக விழாவையொட்டி கற்சிலை விக்ரகங்களை மாற்றுவதில், பழைய நடைமுறையை பின்பற்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக கோவில்களில் கும்பாபிேஷகத்துக்காக, பாலாலயம் செய்ய முடிவு எடுக்கப்படும். அப்போது, கற்சிலை விக்ரகம் சேதம் அடைந்தால், மண்டல ஸ்பதியிடம் கருத்துரு பெற்று, வரைபட குழுவிலும் அனுமதி பெற்று, மருந்து சாற்றும் நிகழ்வின் போது, புதிய விக்ரகம் அமைக்கப்படும்.
தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்து, அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவிலில், திருப்பணி செய்யும் போது, கற்சிலை விக்ரகங்களுக்கு பாலாலயம் செய்ய
அலுவலகத்துக்கு வரும் முன்மொழிவுகளில், கற்சிலை விக்ரங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பது குறித்து தெரிவிப்பதில்லை.
பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றிட வரும் முன்மொழிவுகளில், பாலாலயம் செய்து அகற்றப்பட்ட கற்சிலை விக்ரகங்களுக்கு பதிலாக புதியதாக வைக்க குறுகிய கால இடைவெளியில் வரைபடக்குழுவில் மட்டும் ஒப்புதல் பெற்று முன்மொழிவு வழங்கப்படுகிறது.
வரைபடக்குழு பரிந்துரையின் படி, புதிய கற்சிலை விக்ரகங்களை பிரதிஷ்டை செய்ய முன்மொழிவுகள் அனுப்புகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால், தேவையற்ற வழக்குகளை இத்துறை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, புதிய கற்சிலை விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்ய, மாநில அளவிலான வல்லுனர் குழுவின் தீர்மானம் பெற்ற பின், வரைப்பட குழுவின்
பரிந்துரை பெற்று, ஆணையர் முன்மொழிவுக்கு அனுப்ப வேண்டும்.
புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கு வரைபடக்குழு பரிந்துரை, ஆகம வல்லுநர் கருத்துரு மற்றும் தொடர்புடைய திருக்கோவிலின் அர்ச்சகர் கருத்துரு ஆகியவை பெற்று முன்மொழிவு அனுப்ப வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாவிட்டால் அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிலைகள் சேதமடைந்தால் கோவில் விதிமுறைகளின்படி, ஸ்தபதி மட்டும் தான், கருத்துரு வழங்க இயலும். ஸ்தபதி கருத்துருவில், மாநில அளவிலான வரைபடக்குழு அனுமதி பெற்று, புதிய சிலையை கும்பாபிேஷகத்துக்கு முன் மருந்து சாற்றும் நிகழ்வில் பிரதிஷ்டை செய்து கொள்ளலாம்.
இந்த முறையை முற்றிலும் மாற்றும் வகையில், ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், கும்பாபிேஷக விழாவில் காலதாமதம் ஏற்படும்.
வரைபடக்குழு மாமல்லபுரம் சிற்ப கல்லுாரி முதல்வரை தலைவராக கொண்டுள்ளது. எனவே, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பது, ஆன்மிக பெரியோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --