267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் ஓராண்டாக திணறும் 'கஸ்டம்ஸ்'

சென்னை: சென்னை விமான நிலையத்தில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தியவர்களின் பின்னணியை கண்டுபிடிக்க முடியாமல், ஓராண்டாக சுங்கத்துறை திணறி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில், 60 நாட்களில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள், கடந்தாண்டு ஜூன் மாதம் நடத்திய விசாரணையில், சென்னை விமான நிலையத்தில், 'ஏர் ஹப்' என்ற பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்திய ஷபீர் அலி என்பவர், கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவருடன், கடையில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் இலங்கை பயணி உட்பட ஒன்பது பேரை, சுங்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாத இறுதியில் கைது செய்தனர். விமான நிலையத்தில் கடை நடத்த உரிமம் பெற, ஷபீர் அலிக்கு பா.ஜ., பிரமுகர் பிரித்வி உதவியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், சிறையில் உள்ள ஷபீர் அலி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட சிலர் மீது, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தில் கடந்தாண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இப்பின்னணியில், தமிழகத்தை சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவர் இருப்பதாகக் கூறி, அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வந்தனர். ஓராண்டு முடியும் நிலையில், ஒரு கிராம் தங்கத்தை கூட மீட்க முடியாமல், சுங்கத்துறை திணறி வருகிறது. தற்போது, புதிய அதிகாரிகள் பொறுப்பேற்ற நிலையிலாவது, இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தனக்கு முன்பின் தெரியாத ஒருவர் வாயிலாகவே கடத்தல் நடந்ததாக, ஷபீர் அலி ஒப்புக் கொண்டுள்ளார். கடத்தல் பின்னணியில் உள்ள 'சிண்டிகேட்' குறித்து கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள், தற்போது வழக்கமான காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள், வழக்கு விசாரணையை தொடர்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


