'ஜெய்ஹிந்த், ஜெய்பாரத்': சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷூ சுக்லா உற்சாகம்

1

புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து முதல் முறையாக பேசிய இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா, ஹிந்தியில் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பி உள்ளார்.


அந்தச் செய்தியில் சுபான்ஷூ சுக்லா கூறியதாவது: என் அன்பான இந்திய மக்களுக்கு ஒரு சிறிய செய்தி. உங்களின் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் நான் சர்வதேச விண்வெளி நிலையம் வந்து அடைந்துவிட்டேன். இது எளிதாக தோன்றினாலும், எங்கள் தலைகள் கொஞ்சம் கனமாக இருப்பது போல் உணர்கிறோம். லேசான அசவுகரியம் உள்ளது. ஆனால், எது எதுவும் முக்கியமில்லை. இவை அனைத்தும் சிறிய விஷயங்கள். சில நாட்களில் நாங்கள் அதற்கு பழகிவிடுவோம்.


அடுத்த 14 நாட்கள் இங்கு தங்கியிருந்து பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். டிராகன் விண்கலத்தில் இருந்து உங்களுடன் கொஞ்சம் பேசினேன். இங்கிருந்தும் தொடர்ந்து பேசுவோம். இந்த பயணத்தை உற்சாகமாக்குவோம். மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்போம். மூவர்ண கொடியை பெருமையுடன் தோளில் சுமந்து செல்கிறேன். அடுத்த 14 நாட்கள் அற்புதமாக இருக்கும் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நன்றி. ஜெய்ஹிந்த். ஜெய்பாரத். இவ்வாறு அவர் பேசினார்.


விண்வெளி மையத்தில் வரவேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து சுக்லா பேசியதாவது: இந்த பயணம் சிறப்பானதாக இருந்தது. விண்வெளி வருவதற்கு ஆர்வமாக இருந்தேன். சர்வதேச விண்வெளி மையத்துக்கு வந்து உங்களை சந்தித்த போது உங்கள் வீட்டு கதவை திறந்து எங்களை வரவேற்றீர்கள். நான் எதிர்பார்த்த அனைத்தையும் தாண்டி விட்டீர்கள். அனைவருக்கும் நன்றி. அடுத்த 14 நாட்கள் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது அற்புதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement