இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் ஜூலை 2 வரை, மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ.,; கோவை மாவட்டம் சோலையாரில் 17; வால்பாறையில் 13; சின்னக்கல்லாரில் 12; நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கு, மேல்பவானி பகுதிகளில், தலா 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதேபோல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது மேற்கு,- வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா - மேற்கு வங்காள கடலோர பகுதிகளை கடந்து நகரக் கூடும்.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் வரும் 2ம் தேதி வரை, சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சிலப் பகுதிகளில் லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement