என்.பி.டி.,யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்

5


பாரிஸ்: அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.


அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஈரானின் செயலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் அணுஆயுதங்கள் தயாரிப்பை கைவிட ஈரான் மறுத்து வந்தது.


எனவே, இஸ்ரேலுடன் போர் நடத்தி வந்த ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில், அந்நாட்டின் 3 முக்கிய அணுசக்தி நிலைகள் பெரிதும் சேதமடைந்தன.


இதனிடையே, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு சர்வதேச அணுசக்தி முகமை உள்பட பல்வேறு உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்தன.


இந்த நிலையில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்தானது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.


ஐரோப்பா ஒன்றியத்தின் மாநாட்டில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; ஈரான் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் சிறப்பான ஒன்று. ஆனால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து ஈரான் வெளியேறுவது மோசமானதாகும். மேலும், இது இந்த அமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடும். எனவே, அணு ஆயுதங்கள் உற்பத்தியை ஈரான் மீண்டும் தொடங்குவதை தடுக்க வேண்டும், என்றார்.


அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்பது அணு ஆயுதங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பாகும். இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது, இந்த உறுப்பு நாடுகளுடன் ஈரான் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement