மரங்கள் நடுவே ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலை: வாகன ஓட்டிகள் திக்... திக்...

45

பாட்னா: பீஹாரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சாலையில் இருந்த மரத்தை அகற்றாமல் அதனை சுற்றி ரூ.100 கோடி செலவில் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பயத்துடனேயே செல்கின்றனர்.


பீஹாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில், பாட்னா - கயா மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.100 கோடி செலவில் புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 7.48 கி.மீ., தூரம் அமையும் இந்த சாலையில் நடுவில் இருந்த மரங்கள் இடையூறாக இருந்தது. இதனையடுத்து அந்த மரங்களை அகற்றும்படி வனத்துறையிடம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது.


ஆனால், இதற்கு பதிலாக 14 ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வனத்துறையினர் கோரிக்கை வைத்தனர். இது ஏற்கப்படவில்லை. இதனால், சாலை அமைக்க சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து மரங்களை அகற்றாமல் சாலை அமைத்து முடிக்கப்பட்டது. அந்த சாலையில் மரங்கள் நேராக இல்லாமல் ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக உள்ளது. இதனால் இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, இந்த பகுதியில் அதிகளவு விபத்துகள் நடந்துள்ளதால், ரூ.100 கோடியில் சாலை அமைத்தும் பயனில்லை என அந்த வழியாக செல்பவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சாலையில் இருந்த மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement