போலி ஆவணங்கள் மூலம் நிதியுதவி பெற முயன்றவர் மீது வழக்குப்பதிவு

மூணாறு: போலி ஆவணங்கள் மூலம் வீடு கட்டும் நிதியை மோசடி செய்ய முயன்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் 2009 --- 2010 ல், வீடு கட்டும் திட்டத்தில் தேவிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நிதியுதவி பெற்றார். அதனை மறைத்து மூணாறு ஊராட்சி சார்பில் ' லைப் மிஷன்' திட்டம் மூலம் வீடு கட்டுவதற்கு நிதி பெற தடையில்லா சான்று கோரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஏற்கனவே நிதியுதவி பெற்றதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதனால் ஊராட்சி உறுப்பினரின் உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து மூணாறு ஊராட்சி வி. ஏ.ஓ. விடம் மூர்த்தி புதிதாக விண்ணப்பித்தார்.

அந்த விண்ணப்பம் சரிபார்ப்பதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, அவை போலி ஆவணங்கள் என அம்பலமானது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மூணாறு போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

கை மாறும் லட்சங்கள்: கேரள அரசு வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனையும், வீடு கட்டவும் நிதியுதவி வழங்கும் ' லைப் மிஷன்' எனும் திட்டத்தை ஊராட்சிகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி வீட்டு மனை வாங்க ரூ. 2.5 லட்சம், வீடு கட்ட ரூ. 4.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதற்கு மூணாறு ஊராட்சியில் உறுப்பினர்கள் ரூ. ஒன்று முதல் ரூ.2 லட்சம் வரை பெற்று பயனாளிகளை தேர்வு செய்கின்றனர். இத்திட்டத்தின் பயனாளியிடம் இருந்து உறுப்பினர் ஒருவர் ரூ. ஒரு லட்சம் பெற்ற புகைப்படம் சமூக வலைதலங்களில் வைரலானது. இதனிடையே ஊராட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க.வினர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தனர். அதனால் மோசடியில் பல உறுப்பினர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement