ரூ.1 கோடி 'டிஜிட்டல்' கைது மோசடி; முதல்முறையாக மேற்கு வங்கத்தில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

2


புதுடில்லி: இந்தியாவில் முதல்முறையாக, டிஜிட்டல் கைது பண மோசடி கும்பல் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்குவங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.


'ஆன்லைன்' மூலமாக சைபர் குற்றவாளிகள் பண மோசடி செய்வதை தடுக்க, சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டதாக ஓய்வு பெற்ற விஞ்ஞானி பார்த்தா குமார் முகர்ஜி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி போலீசார் விசாரணையை தொடங்கினர். பின்னர், மஹாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒன்பது பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகளில் 4 பேர் மஹாராஷ்டிராவையும், 3 பேர் ஹரியானாவையும், 2 பேர் குஜராத்தையும் சேர்ந்தவர்கள்.



இவர்கள் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிகள், இம்தியாஸ் அன்சாரி, ஷாகித் அலி ஷேக், ஷாருக் ரபிக் ஷேக், ஜதின் அனுப், ரோஹித் சிங், ரூபேஷ் யாதவ், சாஹில் சிங், பதான், பானு மற்றும் அசோக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


விசாரணையைத் தொடர்ந்து, 9 பேரும் குற்றவாளிகள் என மேற்குவங்க நீதிமன்றம் அறிவித்தது. டிஜிட்டல் கைது சைபர் மோசடி வழக்கில் நாட்டின் முதல் முறையாக, 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்கு வங்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது சைபர் குற்றங்களின் அதிகரிப்புக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.


''போலீசார் விசாரணை பிப்ரவரி 24ம் தேதி 2025ம் ஆண்டு முடிந்தது. குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது எங்களுக்கு ஒரு மைல்கல் தருணமாக இருக்கிறது'' என சிறப்பு அரசு வழக்கறிஞர் பிவாஸ் சாட்டர்ஜி கூறினார்.

Advertisement