அரசு கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க உள்ளக புகார் குழு: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: அரசு கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க உள்ள புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள 180 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 46 கல்லூரிகளில் பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் உள்ளகப் புகார் குழுக்கள் (POSH - Internal Complaint Committees) அமைக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
அதிலும், தங்கள் கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்கள் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிவிக்கக் கூட கிட்டத்தட்ட 113 அரசுக் கல்லூரிகள் அலட்சியம் காட்டியுள்ளன. மேலும், உள்ளகப் புகார் குழுக்கள் அமைக்கப்பட்ட தஞ்சாவூர், ராசிபுரம், நாமக்கல் அரசுக் கல்லூரிகளில் தலா ஒரே ஒரு பாலியல் புகாரே பதியப்பட்டுள்ளது. அவையும் "சமாதானமாக" முடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளகப் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற POSH விதிமுறை உள்ள போதிலும், அரசுக் கல்லூரிகளிலேயே புகார் குழுக்களை அமைக்காமல் இருப்பது தி.மு.க., அரசுக்கு சட்டம் மீதும் சரி, சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் சரி அக்கறை இல்லை என்பது தெளிவாக வெளிப்படுகிறது.
இதுவரை காவல் நிலையங்களில் பாலியல் புகார்களை அளிக்கும் போது ஏவல்துறை கொண்டு அச்சுறுத்திவந்த தி.மு.க., அரசு, தற்போது குற்றங்களே நடைபெறவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களையே அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதா என்ற கேள்வியும் வலுவாக எழுகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு தி.மு.க., உடன்பிறப்பால் நிகழ்ந்த வன்கொடுமையைக் கண்டு தமிழகமே கொதித்தெழுந்த பின்பும், கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பிற்கென செய்யவேண்டிய அடிப்படைக் கட்டமைப்பைக் கூட தி.மு.க., அரசு செய்யத் தவறியுள்ளது மிகக் கொடுமையானது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று விளம்பரங்களில் முழங்குவது உண்மையானால், அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் பாலியல் புகார்களைத் தெரிவிக்கும் உள்ளகப் புகார் குழுக்களைத் தி.மு.க., அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்!. இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும்
-
கிராமந்தோறும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள்: புதிய தொழில் திட்டத்தை துவக்குகிறது அரசு
-
'டவர்' இல்லை; 'சிக்னல்' இல்லை பி.எஸ்.என்.எல்.,லில் பெருந்தொல்லை
-
சென்னையில் ஆக., 1ல் அமர்க்கள ஆரம்பம்: 'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
-
ஈ.வெ.ரா., நுாலகப் பணியில் கண் திருஷ்டி படம் எதற்கு! பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு விளக்கம்
-
ஆட்சியின் இறுதி கட்டத்தில் மக்களின் நினைப்பு ஸ்டாலின் குறித்து பழனிசாமி கிண்டல்
-
குற்றாலத்தில் வெள்ளம்