சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

புதுடில்லி: நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி:

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் சுதந்திரமும் பாதுகாப்பும் சிறுபான்மையினருக்குக் கிடைக்கிறது.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டை விட்டு வெளியேறியதாக, இதுவரை நான் பார்த்ததில்லை.

காங்கிரஸ் கட்சியால் ஆதரிக்கப்படும் இடதுசாரிகள் தான், சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள், இந்தியாவில் பாதுகாப்பாக இல்லை என்று தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர். அது கண்டிக்கத்தக்கது.


ஒருவர் சிறுபான்மையினராக இருந்தாலும் சரி, பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். பெரும்பான்மை சமூகம் எதைப் பெற்றாலும், சிறுபான்மை சமூகங்களும் அதைப் பெறுகின்றன. ஆனால் சிறுபான்மையினர் பெறும் சில விஷயங்கள், பெரும்பான்மை சமூகத்திற்கு கிடைக்காது. இன்று, ஒவ்வொரு பழங்குடி சமூகமும், ஒவ்வொரு சிறுபான்மை சமூகமும் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளது, ஏனெனில் பெரும்பான்மை ஹிந்து சமூகம் மதச்சார்பற்றதாகவும், இயற்கையாக சகிப்புத்தன்மையோடு இருக்கிறது.அதனால்தான் இந்தியா ஒவ்வொரு சிறுபான்மை சமூகத்திற்கும் விருப்பமான இடமாக உள்ளது. இதை நாம் பாராட்ட வேண்டும்.

இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Advertisement