அஜித்குமாரை தாக்கிய இடத்தில் சி.பி.ஐ., விசாரணை

திருப்புவனம்:நகை திருட்டு வழக்கில் அஜித்குமாரை பருத்திவீரன் சினிமா படப்பிடிப்பு நடந்த தட்டான்குளம் செங்கல் சேம்பர் இருந்த இடத்தில் வைத்து போலீசார் தாக்கியது சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜூன் 27ல் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்த திருமங்கலம் நிகிதாவின் காரில் இருந்து நகை திருடு போனது. மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமாரை 29, விசாரணை செய்த போது போலீசார் தாக்கியதில் ஜூன் 28ல் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ஜூலை 12 முதல் சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று காலை 10:40 மணிக்கு மோஹித்குமார் தலைமையில் பத்து பேர் கொண்ட குழு மூன்று அரசு வாகனம், இரண்டு தனியார் வாகனங்களில் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், கோயில் பாதுகாவலர் பிரவீன்குமார், அஜித்குமாரின் நண்பர் வினோத் ஆகியோரிடம் ஜூன் 28ல் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.ஜூன் 28ல் அஜித்குமாருடன் நவீன்குமார், பிரவீன்குமார், வினோத் ஆகியோரை போலீசார்வேனில் எங்கெங்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினரோ அந்த இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரித்ததுடன் சம்பவ இடத்தில் அவர்கள் இருப்பது போன்று புகைப்படம், வீடியோ எடுத்தனர்.

ஜூன் 28ம் தேதி நடந்த சம்பவ நேரம், வழித்தடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

போலீசார் யாரை முதலில் அடித்தனர். யார் யார் அடித்தனர் என விசாரணை செய்து அதனை பதிவு செய்தனர். பருத்திவீரன் படப்பிடிப்பு நடந்த தட்டான்குளத்தில் செங்கல் சேம்பர் இருந்த இடத்தில் ஜூன் 28 ம் தேதி மதிய உணவுக்கு பின் வைத்து தாக்கியதாக ஆட்டோ டிரைவர் அருண் தெரிவித்திருந்தார்.

எனவே அங்கு வைத்தும் விசாரணை நடத்தினர்.

அதன் பின் தி.புதுார் பைபாஸ் ரோடு அருகே தவலைக்குளம் கண்மாய்கரை புளிய மரத்தில் கட்டி வைத்து போலீசார் தாக்கியதாக கூறியதால் அங்கும் அழைத்து சென்று விசாரித்தனர்.

கடைசியாக மடப்புரம்கோயில் அலுவலகம் பின்னால் கோசாலைக்கு அஜித்குமாரை அழைத்து வந்து தாக்கிய போது தான் உயிரிழந்துள்ளார்.

கோசாலையில் அவரை கட்டி வைத்த இடத்தில்சி.பி.ஐ., தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

கோசாலையில் அஜித்குமாரின் செருப்பு, தாக்குவதற்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் குழாய், உடைந்த ரீப்பர் மரகட்டை ஆகியவற்றையும் சி.பி.ஐ., குழு கைப்பற்றியது.

போலீசார் தாக்கியதை அலைபேசியில் படம் பிடித்த கோயில் ஊழியர்சக்தீஷ்வரனை வரவழைத்து சரிபார்த்தனர். அஜித்குமார் உயிரிழந்த ஜூன் 28ல் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சி.பி.ஐ., போலீசார் பதிவு செய்தனர்.

Advertisement