காலியிட எண்ணிக்கையை உயர்த்திய மருத்துவ வாரியத்தின் அறிவிப்பு ரத்து

சென்னை : இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.


தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, மருத்துவ தேர்வு வாரியம், 2020ல் அறிவிப்பு வெளியிட்டது.


பின், இந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை, 35 ஆக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.



முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, 35ல் இருந்து 54 ஆக அதிகரித்து, ஏப்ரலில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதை எதிர்த்து, மருத்துவர்கள் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி சி.குமரப்பன் பிறப்பித்த உத்தரவு:

அசாதாரண மற்றும் அவசர சூழ்நிலைகளின் போது, காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இந்த வழக்கில், அதுபோல அசாதாரண சூழல் ஏதுமில்லை.



எனவே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை, 35ல் இருந்து 54 ஆக அதிகரித்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.


மேலும், தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.


இதை அனுமதித்தால், பின்னாளில் தகுதி பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு அடிப்படையில், 35 காலியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement