ஒரு முறையேனும் வாசியுங்க... இதுவே புத்தகத்தின் விலை

'புத்தகம் என்பது, நம் ஆன்மாவின் கண்ணாடி; புத்தகத்தை போல ஒரு விசுவாசமான நண்பன் இல்லை...'

வாசித்ததன் காரணமாக வரலாற்றில் இடம் பிடித்த எண்ணற்ற அறிஞர்கள், இதுபோன்ற வாசிக்க துாண்டும் வாக்கியங்களை பதிவு செய்து வைத்துள்ளனர்.

தொழில்நுட்ப புரட்சியால், உலகின் ஒட்டு மொத்த அறிவும் இணையத்தின் வடிவில், விரல் நுனிக்குள் வந்து விட்ட போதிலும், வாசிப்பதில் கிடைக்கும் திருப்தி, வேறெதிலும் இல்லை என்பதே, வாசிப்பை நேசிப்போரின் ஆணித்தரமான கருத்து.

கடந்த வாரம் ஆங்காங்கே நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் வாசிப்பை நேசிக்க செய்யும் முயற்சியாக, திருப்பூர் தாய்த்தமிழ் இலக்கியப் பேரவையினர், 'காமராஜர் என்னும் மாமனிதர்' என்ற தலைப்பில் புத்தகங்களை இலவசமாக வழங்கினர். ''இந்த புத்தகத்தை ஒரு முறையேனும் வாசியுங்கள்... அதுவே, இந்த புத்தகத்துக்கான விலை'' என, வாசிப்புக்கும் மதிப்பு கொடுக்க முயன்றனர்.

''வரலாற்றில் இடம் பிடித்த எண்ணற்றவர்களின் பின்னணியில், புத்தகங்கள் தான் அவர்களுக்கு ஊன்றுகோலாக, துாண்டுகோலாக இருந்திருக்கிறது என்பதை மாணவ சமுதாயம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான், வாசிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், புத்தகங்களை பரிசாக வழங்கினோம்,'' என்றார் தாய்த்தமிழ் இலக்கிய பேரவை நிறுவனர் மீன்கொடி பாண்டியராஜ்.

Advertisement