கானுலா கல்வியில் மாணவர்கள் ஆர்வம்!

ஏட்டுக்கல்வியை தாண்டி, பரந்து, விரிந்து கிடக்கும் இயற்கையையும், அதில் வாழும் பறவை, விலங்கினங்களையும், வளரும் மரம், செடி, கொடிகளையும் மாணவ சமுதாயத்திற்கு கற்பிக்க வேண்டியது அவசியம்.

இதை உணர்ந்து, திருப்பூர் மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில், பத்மாவதி புரம், கருப்பகவுண்டம்பாளையம் மற்றும் பிச்சம்பாளையம் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர், 120 பேர், பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் மேற்பார்வையில், திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அழைத்து வரப்பட்டனர். திருப்பூர் வனத்துறை சார்பில் ரேஞ்சர் நித்யா, பாரஸ்டர் உமா உள்ளிட்டோர் மாணவர்களை வரவேற்று, நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் உருவான விதம் குறித்து விளக்கினர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், பறவை நோக்கிலில் ஈடுபட்டு, எவ்வாறு பறவைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பது என்பது குறித்து, பயிற்சி வழங்கினார்.

''சின்னஞ்சிறு பறவை துவங்கி, ஒவ்வொரு பறவைகளும், சின்னஞ்சிறு புல் துவங்கி மரம், செடி, கொடிகள் என அனைத்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அரண் போன்றது. பறவைகளின் எச்சங்களில் இருந்து முளைக்கும் செடி, கொடிகள் தான் அழகிய சோலைகளாக, காடுகளாக உருமாறி, சுத்தமான மூச்சுக்காற்றை வழங்கிக் கொண்டிருக்கிறது'' என்பது போன்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

ஏறத்தாழ, ஒரு மணி நேரம் பைனாகுலர் உதவியுடன் பறவை நோக்கிலில் ஈடுபட்ட மாணவர்களின் கண்ணில், 25க்கும் மேற்பட்ட பறவைகள் தென்பட்டன. 'இந்த அனுபவம், இயற்கையை நேசிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது' என, மாணவர்கள் நெகிழ்ந்தனர்.

Advertisement