அவதுாறு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்; சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டு பதிவு

கோவை: பெண் போலீசார் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது,கோவை கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

சென்னையை சேர்ந்த சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற' யு டியூப்' சேனல் நடத்தி வந்தார். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற யு டியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்தார். புகாரின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கடந்தாண்டு மே மாதம் 6ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது, கஞ்சா கடத்தல் உட்பட மாநிலம் ழுழுவதும் மொத்தம், 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 'ரெட்பிக்ஸ்' யு டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது தேனியில் கஞ்சா கடத்தல் வழக்கு தவிர, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பதிவான அவதுாறு வழக்குகள், அனைத்தையும் ஒரே கோர்ட்டில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, சவுக்கு சங்கர் மீதான 15 வழக்கு, கோவை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டது.

கோவை சைபர் கிரைம் வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றச்சாட்டு பதிவுக்காக, சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. ஜாமினில் விடுவிக்கப்பட்ட இருவரும், கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் நேற்று ஆஜரானதை தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சாட்சி விசாரணைக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே போல சங்கர் மீதான மற்ற 15 வழக்குகளில், குற்றச்சாட்டு பதிவுக்காக, செப்., 2க்கு மாஜிஸ்திரேட் அருண்குமார் ஒத்திவைத்தார்.

Advertisement