மனைவிக்கு 'டார்ச்சர்': தலைமறைவான ஏட்டு கைது

2

மதுரை: மதுரையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ் ஏட்டு பூபாலன் 35, திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

மதுரை காதக்கிணற்றில் வசிப்பவர் பூபாலன். அப்பன்திருப்பதி போலீஸ் ஏட்டு. இவரது மனைவி தங்கப்பிரியா 30. இரு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 7 ஆண்டுகளான நிலையில் மாமனரான விருதுநகர் மாவட்டம் சாப்டூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோரின் துாண்டுதலில் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார். காயம்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

மனைவியை தாக்கியது குறித்து தங்கையிடம் பூபாலன் பேசிய ஆடியோ வைரலானதால் அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். பூபாலன், செந்தில்குமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை திருப்பூரில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த பூபாலனை தனிப்படை போலீசார் மதுரை அழைத்து வந்தனர். அவர் பணியாற்றும் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான சக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement