அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பா.ம.க.,விலிருந்து சஸ்பெண்ட்: ராமதாஸ்

3

சென்னை: அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பா.ம.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ராமதாஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர்.


பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல், ஆறு மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். ஆனால், பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், நான் தான் தலைவர் என அன்புமணி கூறியுள்ளார். மேலும், கட்சியில் இருந்து அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்க, அவர்களை மீண்டும் அன்புமணி நியமித்து வருகிறார்.


சட்டசபையில் பா.ம.க.,வுக்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் சமூக நீதி பேரவைத் தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பாலுவும் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.


இந்நிலையில் இந்த 4 பேரையும் பா.ம.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளரான தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் , நான்கு பேரும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். கட்சியினர் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement