மேய்ச்சலுக்கு சென்ற பெண் கொலை; கொலையாளிகளை அடையாளம் காணுவதில் திணறும் அரசு: சீமான்

1

சென்னை: மேய்ச்சலுக்கு சென்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை அடையாளம் காணுவதில் திமுக அரசின் காவல்துறை திணறி வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு கடந்த ஜூலை-14 அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றவர், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள துயர நிகழ்வு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

கணவனை இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளுடன், கால்நடைகள் வளர்ப்பின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவந்த பர்வீன்பானுவை இழந்து, அவருடைய இரண்டு குழந்தைகள் தவித்து நிற்பது நெஞ்சைக் கனக்க செய்கிறது.

திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடந்துவரும் கொடூரக் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் நடமாட முடியாத கொடுஞ்சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் திமுக அரசின் காவல்துறை திணறி வருவது, மிகப்பெரிய பெருங்கொடுமையாகும்.

ஆகவே, தங்கை பர்வீன்பானுவை கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும், தாயை இழந்து தவிக்கும் தங்கை பர்வீன்பானுவின் மகள்கள் இருவருக்கும் அரசு வேலையும், உரிய துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement