மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காயப் பதவி: அண்ணாமலை

சென்னை: 'மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காயப் பதவி என்று கூறியவன் நான். உரிக்க உரிக்க உள்ளே ஏதும் இருக்காது', என்று பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; அஜித் குமார் உயிரிழந்த வழக்கில், சில அதிகாரிகளே இரண்டு நம்பர் பிளேட் மாட்டியிருப்பதாக பத்திரிகையாளர்கள் நீங்களே செய்தி போட்டிருக்கீங்க. ஒரு அரசு எப்போதும் தப்பு செய்யக் கூடாது. அரசின் சிஸ்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே தவறு செய்ய ஆரம்பித்தால், அது எங்கே போக முடியும். போலீஸின் உள்கட்டமைப்பை சீர்செய்யும் விதமாக ஓய்வுபெற்ற நீதிபதியை வைத்து ஒருநபர் ஆணையம் அமைத்தனர். அதன் அறிக்கை என்னாச்சு.
போலீசார் செய்தது தவறு தான். போலீசார் அதிக பணிச்சுமையில் இருக்கிறார்கள். போதிய வசதிகள் இல்லை. 2,3 போலீசார் தவறு செய்வதால் ஒட்டுமொத்த போலீசையே குறை சொல்லக் கூடாது. போலீஸாரின் வாழ்வாதாரத்தை உயர்த்த முதல்வர் ஒருநபர் ஆணையத்தை அமைக்கட்டும்.
அஜித்குமார் வழக்கில் தூண்டுதல் இல்லாமல், வேலையில்லாமல் அவரை துன்புறுத்தப்போகிறாரா? அதிகாரம் படைத்தவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அஜித்துக்கும், அந்த கான்ஸ்டபிளுக்கும் நேரடியாக என்ன தொடர்பு? போலீசாரின் பணிச்சுமையை குறைக்கும் வரையில், இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும், எனக் கூறினார்.
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்க என்ன ஏமாளிகளா? என்று இ.பி.எஸ்., கூறியது பற்றிய கேள்விக்கு; பா.ஜ.,வை பொறுத்தவரையில் நாங்கள் யாரையும் ஏமாற்றக் கூடிய கட்சியும் கிடையாது. ஏமாறக் கூடிய கட்சியும் கிடையாது. பா.ஜ.,வுக்கு ஒரு தன்மை இருக்கு. எந்தக் கட்சியையும் கீழே தள்ளி நாங்கள் வளர வேண்டும் என்று நினைப்பதில்லை. இந்தப் பிரச்னை (இ.பி.எஸ்.,பேசியது) குறித்து எங்கள் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்து விட்டார்.
இந்தக் கூட்டணி அமைத்ததில் என்னுடைய பங்கு இல்லை. எங்களுடைய தரப்பில் சம்பந்தப்பட்ட தலைவர்கள் பேசுவார்கள். தமிழகத்தில் தி.மு.க.,வை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலுவிழந்து வருகின்றன. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்குமா? என தெரியாது. 2024 பார்லிமென்ட் தேர்தலே ஒரு சாட்சி. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. மற்ற கட்சிகளும் பிற கட்சிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோரும் வளர வேண்டும். காலம் இருக்கிறது. காத்திருங்கள்.
இந்தியாவில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் போது 100க்கு 20 சதவீதம் பறிமுதல் செய்யப்படும். எனவே, அரசே இன்சூரன்ஸ் போட்டு, காணாமல் போன நகை திரும்ப கொடுக்கும் திட்டத்தை கொண்டு வரவேண்டும், என்றார்.
ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு; ஆட்சியில் பங்கு என்பதை நான் எங்கேயாவது பேசுனேனா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார், அதைத்தான் நான் சொன்னேன். மேடையில் அமித்ஷாவும், இ.பி.எஸ்.,ஸூம் ஒன்றாக இருக்கும் போது, நான் அமித் ஷா அருகில் அமர மாட்டேன் என்று சொன்னேனா? 3 மாதமா அமைதியாக இருக்கேனா? நான் கூட்டணிக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னேனா? அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கிறேன்.
அ.தி.மு.க.,வின் எழுச்சி பயணத்தில் நான் ஏன் பங்கேற்க வேண்டும். எங்கள் கட்சியில் இருந்து மாநில தலைவர், மத்திய அமைச்சர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். நான் முக்கியமான நபர் அல்ல, சாதாரண நபர் தான். சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால், வாயை மூடிக் கொண்டே பார்ப்பேன்.
தேசிய பொதுச்செயலாளர் பதவி குறித்து; மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காயப் பதவி என்று கூறியவன் நான். உரிக்க உரிக்க உள்ளே ஏதும் இருக்காது. நம்ம வேலையை நாம் செய்வோம். ஆண்டவன் இருக்கிறான், இவ்வாறு அவர் கூறினார்.